உலகில் அதிக வெப்பம் பதிவான 100 நகரங்களின் பட்டியலில் 98 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாக உள்ளன. மத்திய அரசின் காற்றுத் தரக் குறியீடு தரவுகளின்படி, இதுவரை இல்லாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளதால், உலகளாவிய வெப்ப அலையின் மையப்பகுதியாக இந்தியா மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாகவும் சில இடங்களில் 45 டிகிரி செல்சியஸ்க்கு அருகிலும் பதிவாகியுள்ளது. நாடு முழுவதுமே வெப்பம் அதிகரித்து வருவதையே இந்த புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுவதாக வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் வழக்கமாக கோடைக்காலங்களில் நிலவும் வறண்ட வெப்ப அலைகளை விட, பருவமழை காலங்களில் நிலவும் 'ஈரப்பத வெப்ப அலைகள்' (Moist Heatwaves) மிகவும் ஆபத்தானவை என்று சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது.



